ஒருநாள் இரவு, முல்லாவுக்கு ஒரு கனவு. அதில் ஒரு பெரிய ராஜா வந்தார். அவருக்கு 95 ரூபாய் தருவதாகச் சொன்னார்.
’அதென்ன கணக்கு 95 ரூபாய்?’ என்றார் முல்லா நசிருதீன். ‘உங்களிடம் இல்லாத பணமா? மொத்தமாக ரவுண்டாக நூறு ரூபாய் தரலாமே!’
’ம்ஹூம், 95தான்’ என்றார் அவர். அரை விநாடி யோசித்துவிட்டு. ‘வேண்டுமானால் உனக்காக 96 ரூபாய் தருகிறேன்’ என்றார்.
‘அதெல்லாம் முடியாது. தருவதாக இருந்தால் நூறு ரூபாய் தாருங்கள். இல்லையென்றால் வேண்டாம்!’
‘சரி. 97?’
‘ம்ஹூம்!’
‘98?’
‘நோ!’
‘99?’
‘வேண்டாம்!’
’அப்படியானால் சரி’ என்று எழுந்துகொண்டார் ராஜா. அதோடு முல்லா நசிருதீனின் கனவும் கலைந்துவிட்டது.
முல்லா பதறிப்போனார். ‘ராஜா, அந்த 99 ரூபாயே தாருங்கள்’ என்று கெஞ்சினார். ‘98? 97? 96? குறைந்தபட்சம் அந்தத் தொண்ணூற்றைந்து ரூபாயையாவது கொடுத்துவிடுங்கள்’ என்றார்.
ஆனால், அவருடைய கூக்குரலைக் கேட்பதற்கு அந்த ராஜா அங்கே இல்லை. அவர் கனவோடு காணாமல் போயிருந்தார்.
பலர் இப்படிதான். கனவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாமலே வாழ்கிறார்கள். தங்களுடைய எதிர்பார்ப்புடன் எதார்த்தத்தைப் பொருத்திப்பார்க்கமுடியாமல் திணறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஜென் சிந்தனை மிகவும் அவசியப்படுகிறது என்கிறார் ஓஷோ. ‘நீங்கள் அழகான கனவுகளைக் காண்கிறீர்கள். ஆனால் அவற்றால் பிரயோஜனம் இல்லை. விழித்துக்கொள்ளுங்கள்! இந்த விநாடியை அனுபவித்து வாழப் பழகுங்கள்!’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக